ஆயுதமோதலின்போது இடம்பெற்ற பாலியல் அத்துமீறல்கள் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டன – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிவிப்பு!
இலங்கையில் ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வெறுமனே தற்செயலாக அங்கொன்றும், இங்கொன்றுமாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. மாறாக அவை வேண்டுமென்றே, பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும்.
இவை தகவல்களைத் திரட்டுவதற்கும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்குவதற்கும், பரவலான அச்ச மற்றும் அவமான உணர்வை வேரூன்றச் செய்வதற்குமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன என ஐக்கிய நாடுக்ள மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்டோருக்கான நீதியைத் தாம் வழங்காவிடின், வேறு யார் வழங்குவார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறி ஒருவருடம் கடந்திருக்கும் நிலையில், அந்த சொற்கள் நடைமுறை யதார்த்தமாக மாறும் வரையில் மக்கள் காத்திருப்பதாகவும் அவ்வலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நீண்டகாலமாகத் தயாரிக்கப்பட்டுவந்த இலங்கையில் மோதல்களின் போதான பாலியல் வன்முறைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் பற்றிய ‘நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் – நீதி கிட்டும் என்ற நம்பிக்கையைக்கூட இழந்துவிட்டோம்’ எனும் தலைப்பிலான 30 பக்க விரிவான அறிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (13) வெளியிடப்பட்டுள்ளது. அதில் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வெறுமனே தற்செயலாக அங்கொன்றும், இங்கொன்றுமாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. மாறாக அவை வேண்டுமென்றே, பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும்.
இந்த நடவடிக்கைகள் போர்க்குற்றங்களாகவோ அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாகவோ அடையாளப்படுத்தப்படக்கூடியவையாகும். இவை தகவல்களைத் திரட்டுவதற்கும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்குவதற்கும், பரவலான அச்ச மற்றும் அவமான உணர்வை வேரூன்றச் செய்வதற்குமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறான வன்முறைகள் கட்டமைப்பு ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், மோதலினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அதனூடாக வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டன.
போர்க்கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அதன் பின்னர் நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்கள் தவறியிருப்பது பாலியல் வன்முறைகளிலிருந்து நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதில் அரசுகள் அடைந்திருக்கும் தோல்வியையும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதையுமே பிரதிபலிக்கின்றன.
தமது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களின் துயரத்தைத் தமக்கு வழங்கப்பட்ட ஆணை பிரதிபலிப்பதாகவும், அவர்களுக்கான நீதியைத் தாம் வழங்காவிடின், வேறு யார் வழங்குவார்கள் எனவும் கடந்த 2024 நவம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதியாக தனது முதலாவது உரையை நிகழ்த்திய அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். அதன் பின்னர் தற்போது சுமார் ஒருவருடம் கடந்திருக்கும் நிலையில், அவரது சொற்கள் நடைமுறை யதார்த்தமாக மாறும் வரை பாதிக்கப்பட்ட தரப்பினர் காத்திருக்கிறார்கள்.
அத்தோடு மோதல்கால பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டோர் முகங்கொடுத்துவரும் துன்பத்தைப் புரிந்துகொண்டு, அவர்களை மேலும் மனவுளைச்சலுக்குள் தள்ளுவதைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் வாழும் இடங்களில் நிறுவப்பட்டுள்ள யுத்த வெற்றிச்சின்னங்களை அகற்றவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.