பேரிடர் நிவாரண விநியோக நடவடிக்கைகளில் அரசாங்க அரசியல்வாதிகள் தலையிடுகின்றனர் எனவும், தங்கள் ஆதரவாளர்களின் நலனுக்காக அரச நிவாரண நிதியைத் திருப்பி விடுகின்றனர் எனவும் முறைப்பாடுகள் ஏராளமாக எழுந்துள்ளன என்று கொழும்பின் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தனது நேற்றைய (ஞாயிறு) வார வெளியீட்டின் ஆசிரிய தலையங்கத்தில் பட்டவர்த்தனமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
‘பேரிடர் நிவாரணமும் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுகளும்’ என்ற தலைப்பில் அந்த ஆசிரிய தலையங்கம் வெளியாகியுள்ளது.
”பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் ஒரு பெரிய இழப்பீட்டுத் தொகுப்பை அறிவித்துள்ளது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கான பணத்தை வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கி உள்ளது. மக்களுக்குச் சொந்தமான நிதியையே அரசு செலவிடுகிறது. அந்த நிதி ஜே.வி.பியினுடையது அல்லது தேசிய மக்கள் சக்தியுனுடையது அல்ல. எனவே, அரச நிதியை பொறுப்புடன் வழங்குவது மட்டுமல்லாமல், அவ்வாறு செய்வதாகவும் காட்டப்படவும் வேண்டும். வெளிப்படைத்தன்மை என்பது அனைத்து வகையான நிதி முறைகேடுகளுக்கும் மிகவும் சக்திவாய்ந்த மருந்தாகும். அரசாங்க அரசியல்வாதிகள் நிவாரண விநியோக நடவடிக்கைகளில் தலையிடுகின்றனர் எனவும், தங்கள் ஆதரவாளர்களின் நலனுக்காக நிதியை திருப்பி விடுகின்றனர் எனவும் முறைப்பாடுகள் ஏராளமாக உள்ளன.” – என்று அந்த நாளிதழ் தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி. – என்.பி.பி அரசியல்வாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் அனைத்து மட்டங்களிலும் நடைபெற்று வரும் பேரிடர் நிவாரணத் திட்டங்களில் தலையிடுகின்றனர் எனவும், கிராம சேவையாளர்களைக் கூடத் தடுக்கின்றனர் எனவும் இலங்கை ஐக்கிய கிராம சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றமையையும் அந்த நாளிதழ் மேற்கோள் காட்டியிருக்கின்றது.
அரசியல் அதிகாரத் தரப்பினர் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு கடிதங்களை அனுப்பி, அரசு நடத்தும் நலன்புரி மையங்களுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளனர் என்று அவர் கூறியமையும் அந்தத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு பிரஜாசக்தி குழுக்களின் அரசாங்க உறுப்பினர்களிடமிருந்து ஒப்புதல் பெறுமாறு அரச அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம சேவையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்த விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதே சமயம் கடந்த வியாழக்கிழமை, ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட இலங்கை கிராம சேவையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுமித் கொடிகார இதே போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
தேசிய மக்கள் முன்னணி அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர்கள் தலா ரூ.25,000 இழப்பீடு பெற தன்னிச்சையாக உதவுகின்றனர் என அவர் கூறினார். பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், நிவாரணத் திட்டங்கள் ஒருபோதும் அந்த வகையில் அரசியலாக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் விசாரணைகளை கட்டாயப்படுத்த வேண்டிய அளவுக்கு அதிர்ச்சியளிப்பனவாக உள்ளன என்று அந்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
‘பேரிடர் நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிதியை தவறாகப் பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட வேண்டும். சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆட்சியில் இருக்கும்போது எரிபொருள் உதவித்தொகையை மோசடியாகப் பெற்றமைக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றம் தண்டிக்கப்படாமல் போகக்கூடாது.’ – என்றும் அந்த ஆங்கிலப் பத்திரிகை தெரிவித்துள்ளது.










