இலங்கையில் முதன் முறையாக யாழ் மாவட்டத்தில் மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் யாழ் மாவட்டத்தில் இன்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு யாழ் மாவட்ட மோட்டார் வாகன திணைக்களத்தினால் இலங்கையில் முன்னுதாரணமான முறையில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு வடமாகாண மாகாண மோட்டார் வாகன திணைக்களத்தின் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.இதன் பொழுது உள்ளூரில் மாற்றுதிறனாளிகளுக்கு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு பயணிப்மது மற்றும் அவர்களுக்கான விசேட சாரதி அனுமதி பத்திரங்களை வழங்குமாறும் இதன் காரணமாக தாம் பொலிஸ் மற்றும் சட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுவதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மோட்டார் வாகன தலைமையக தொழில்நுட்ப பிரவின் உதவியுடன் வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவியுடனும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கு வாகன பதிவு வழங்கப்பட்டு சாரதி அனுமதி பத்திரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருந்த பொழுதிலும் குறித்த சாரதி அனுமதி பத்திரத்தில் அவர்களுடைய வாகன இலக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் வேறு வாகனங்களை அவர்கள் செலுத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் அனுமதி வழங்கபட்ட 8 மோட்டார் வாகனங்களின் உரிமையாளர்களான எட்டு மாற்றுத்திறனாளி உரிமையாளர்களுக்கு இவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டதோடு மேலும் மாற்றுதிறனாளிகள் பதிவு செய்ய முற்படுகின்ற பொழுது அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் மாவட்டம் செயலர் மருதலிங்கம் பிரதீபன் ,வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எஸ்.அகல்யா,வடமாகாண மோட்டார் வாகன திணைக்கள பணிப்பாளர் கு.காஞ்சனா, வடமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள பணிப்பாளர் சுஜீவா சிவதாசன் மோட்டார் திணைக்கள உதவி ஆணையாளர் யாழ்ப்பாணம் இ.சிவகரன் , யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) கனகராசா சிறிமோகனன் ,உதவி மாவட்ட செயலாளர் தர்ஷனி ,மாற்று திறனாளிகள் பொதுமக்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


