சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வாளர்கள் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைத்தியா வீதிப் பகுதியில் வைத்து சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயர் வேனில் கடத்தப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவத்துடத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நவகத்தேகம மற்றும் எலயபத்துவ பொலிஸ் பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 42 மற்றும் 46 வயதுடைய நவகத்தேகம மற்றும் உலுக்குளம பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் இராணுவப் புலனாய்வாளர்கள் ஆவர்.
சந்தேகநபர்கள் நேற்று கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபர்கள் இருவரையும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 2018ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பில் 2017ஆம் ஆண்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் 5 பேர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.