யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன நான்கு மீனவர்களையும் தேடும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இந்தியத் தூதரகத்துடன் அவசரத் தொடர்புகளை மேற்கொண்டுள்ளார்.
பருத்தித்துறை – முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் கடந்த புதன்கிழமை இரவு கடலுக்குச் சென்ற நிலையில், அவர்களின் படகு ஆழ்கடலில் மூழ்கிக் காணாமல்போயுள்ளனர். இவர்களைத் தேடும் பணியில் உள்ளூர் மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், எம்.ஏ. சுமந்திரன் நேற்று பிற்பகல் பருத்தித்துறை முனை கடற்கரைக்கு நேரில் விஜயம் செய்தார்.
கடற்கரையில் திரண்டிருந்த மீனவர்களிடம் தற்போதைய நிலைமைகளைக் கேட்டறிந்த அவர், உடனடியாகக் காங்கேசன்துறை கடற்படை கட்டளை அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கடற்படையினரின் விசேட மீட்புப் படகுகளை அனுப்பித் தேடுதல் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்தாவுடன் அவசரத் தொடர்பை ஏற்படுத்திய எம்.ஏ. சுமந்திரன், ஆழ்கடலில் படகு மூழ்கியுள்ளதால் மீனவர்களின் உயிரைப் பாதுகாக்க வான்வழியாக ஹெலிகொப்டர் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்திக் கோரிக்கை விடுத்தார்.
சுமந்திரனின் இந்த அவசரக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாதுகாப்புச் செயலாளர், இன்று சனிக்கிழமை காலை முதல் கடற்பரப்பில் உலங்கு வானூர்தி மூலம் விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் வான்வழியாக முன்னெடுக்கப்படும் என உத்தியோகபூர்வமாக உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகளைக் கருத்திற்கொண்டு, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தையும், இந்தியக் கடலோரக் காவற்படையையும் தொடர்புகொண்ட எம்.ஏ. சுமந்திரன், இந்திய எல்லையோரக் கடற்பரப்பிலும் தேடுதல் பணிகளை முன்னெடுத்து உதவுமாறு உத்தியோகபூர்வமாகக் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கடலில் காணாமல்போன மீனவர்களின் குடும்பங்களின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்ற அவர், கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், மீனவர்களை உயிருடன் மீட்பதற்குத் தன்னால் இயன்ற அனைத்து உத்தியோகபூர்வ மற்றும் சர்வதேச முயற்சிகளையும் தொடர்ந்தும் முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.











