நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு விளைவித்த ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஹட்டன் காரியாலத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று பொகவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர் சாம்பசிவம் சதீஸ்குமார் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
கடந்த 21ம் திகதி டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநரை பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் வைத்து வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இதன்போது செய்தி சேகரிப்பதற்கு அங்கு சென்றிருந்த ஊடகவியலாளரை அச்சுறுத்தியமை மற்றும் ஊடகவியலாளரின் தொலைபேசியை பறித்து பதிவு செய்திருந்த காணொளிகளை அழித்தமை, ஊடகவியலாரின் தனிப்பட்ட வட்ஸப் மெசேஜ்களை பரிசோதித்தமை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளின் ஊடாக ஊடகவியலாளரின் மனித உரிமைகளை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.










