உலகப் புகழ்பெற்ற ஆன்மிக நூலான ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் ஆசிரியர் சுவாமி பரமஹம்ச யோகானந்தர் 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த சன்னியாசி சுத்தானந்தகிரி இன்று இலங்கைக்கு விஜயம் செய்கின்றார்.
முக்கியமாக, கிரியா யோக நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே சுவாமி சுத்தானந்த கிரி இலங்கைக்கு வருகை தருகின்றார்.
ஜூன் 10 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கவுள்ள சுவாமி சுத்தானந்தகிரி யாழ்ப்பாணம், கொழும்பு , கண்டி ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்து கிரியா யோகம் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
“கிரியா யோகம் – மகிழ்ச்சி மற்றும் வெற்றிகரமான வாழ்விற்கான திறவுகோல்” என்னும் தலைப்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணிவரை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நூலக அரங்கிலும், ஜூன் 5 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை கொழும்பு ஐந்து சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தையில் உள்ள பௌத்த கலாசார நிலையத்திலும் சுவாமி சுத்தானந்தகிரி ஆன்மீகச் சொற்பொழிவாற்றவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஜூன் 6 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 7 ஆம் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாட்களில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கீழ் இயங்கும் கொழும்பு 07 ஆர்.ஜி. சேனாநாயக்க மாவத்தையில் உள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் கிரியா யோகம் தொடர்பான இரண்டு நாள் ஆன்மீகப் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.
இதன்போது வை.எஸ்.எஸ். பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்த தகைமையுள்ளவர்களுக்கு சுவாமி சுத்தானந்தகிரியால் கிரியா தீட்சை இலங்கையில் முதன்முறை வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
ஜீன் 8 ஆம் திகதி திங்கட்கிழமை வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தையிலுள்ள சைவமங்கையர் வித்தியாலயம் மற்றும் கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியிலும் சுவாமி சுத்தானந்தகிரி பாடசாலை சமூகத்தினருக்கு உரையாற்றவுள்ளார்.
அதனையடுத்து ஜூன் 9 ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள ஆன்மீக நிகழ்வொன்றிலும் சுவாமி சுத்தானந்தகிரி கிரியா யோகம் தொடர்பில் சிறப்புரையாற்றவுள்ளார். பின்னர் ஜூன் 11 ஆம் திகதி சுவாமி சுத்தானந்தகிரி பாரதம் திரும்புகின்றார்.
இன்றும் இமயமலைச் சாரலில் ஸ்தூல சரீரத்துடன் உயிர்வாழும் கிரியா பாபாஜியினால் அவரது சீடர்களான லாஹிரி மஹாசாயர், சுவாமி யுக்தேஸ்வர் கிரி, சுவாமி பரமஹம்ச யோகானந்தருக்கு அருளப்பட்ட புராதன தியான முறையான கிரியா யோகத்தை, யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவும், பரமஹம்ச யோகானந்தரால் 1920 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ‘செல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்’பும் உலகம் முழுவதும் கற்பித்து வருகின்றது.
அந்த புனித கைங்கரியத்தின் ஓர் அங்கமாகவே சுவாமி சுத்தானந்தகிரியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.










