அரசாங்கத்தின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சமாட்டேன் : 6 மணி நேர விசாரணைக்குப் பின் நாமல் கருத்து!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச, தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகி, சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இன்றைய தினம் (21) விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு தாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என உறுதியளித்தார்.
காலிப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்று தனக்குச் சொந்தமானது எனக் கூறி, அது தொடர்பான விசாரணைகளுக்காகவே தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், கடந்த ‘நல்லாட்சி’ அரசாங்க காலத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் பொய்களைக் கட்டமைத்துத் தனக்கெதிராகப் பயன்படுத்த முயல்வதாகச் சாடினார்.
தவறு எதுவும் செய்யாததால் எந்தவொரு விசாரணைக்கும் நேரில் ஆஜராகி முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், அரசாங்கம் நீதித்துறையின் மீது செல்வாக்கு செலுத்த முயன்றாலும் நாட்டின் சுயாதீன நீதிமன்றங்கள் மீது தமக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நாட்டின் உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் இன்னல்களுக்குத் தீர்வு காணத் தவறிய அரசாங்கம், தனது அரசியல் தோல்விகளை மறைக்கவும் மக்களின் கவனத்தைத் திருப்பவுமே எதிர்க்கட்சியினரை இலக்கு வைத்து இவ்வாறான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இத்தகைய நடவடிக்கைகள் அரசாங்கத்தின் அரசியல் பதற்றத்தையே வெளிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச, அரசாங்கம் எத்தனை சோதனைகளை ஏற்படுத்தினாலும் மக்கள் நலனுக்கான தமது அரசியல் பயணத்தைத் தொடர்ந்து உறுதியுடன் முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.




