மஸ்கெலியா நகரில் டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபையினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் அதன் செயலாளர் எஸ்.ராஜவீரன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் எம்.எஸ்.ஈர்ஜாட் அவர்களின் வழிகாட்டலில் பொது சுகாதார அதிகாரிகள், மவுஸ்சாகலை இராணுவ முகாம் அதிகாரி மற்றும் சிப்பாய்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், மஸ்கெலியா பிரதேச சபையின் சுகாதார பிரிவு அதிகாரி மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரி புரவுண்லோ தோட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது அரச நிறுவனங்கள் மற்றும் மஸ்கெலியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் உள்ளடக்கிய பகுதிகளை பார்வையிட்டனர். அங்கு நுளம்புகள் பெருகும் வகையில் இருந்த பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என்பவற்றுக்கு உடனடியாக டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்கும் வகையில் சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக இப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நுளம்புகள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நுளம்புகள் பெருகுவதை தடுக்கும் வகையில் அடிக்கடி இவ்வாறான சோதனைகள் நடத்தப்பட்டு நுளம்புகள் பெருகும் வகையில் வைத்து இருப்போர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தெரிவித்தார்.















