மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடந்த 09 தினங்களில் 35க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தவேண்டுமானால் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் எனவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
இந்த வாரத்தில் டெங்கு தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக சுற்றாடலை வைத்திருந்த 35பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் தொடர்ந்து டெங்கு அச்சுறுத்தலாக சிவப்பு வலயமாக சுகாதார பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.உதயகுமாரின் தலைமையின் கீழ் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றது.
இன்றைய தினம் புளியந்தீவு பொதுச் சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மற்றும் வாவிக்கரையோரங்கள் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் நுளம்பு பெருகும் வகையில் இருந்த பொருட்கள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.
புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் ப.முருகதாசின் தலைமையில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இதன்போது மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.உதயகுமார் விஜயம் செய்து சிரமதான பணிகளை பார்வையிட்டார்.
புளியந்தீவு பிரதேசத்தில் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி,
நாடு தழுவிய ரீதியில் இன்று டெங்கு நோய் சடுதியாக அதிகரித்துச் செல்கின்ற காரணத்தினாலே, இன்றைக்கு நாட்டில் 15 பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பகுதிகள் மிகவும் ஆபத்தான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும், மட்டக்களப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு டெங்கு நோயாளர்கள் கூடி காணப்படுகின்ற பகுதியாக அடையாளம் காணப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதானமாக கல்லடியில் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகள், அத்தோடு நொச்சிமுனை, நாவலடி போன்ற பிரதேசங்களில் கூடிய அளவு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதோடு தொடர்ந்து ஏனைய எமது பொதுச்சுகாதார பகுதிகளிலும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் பொதுவாக கொழும்பு, கம்பஹா போன்ற தெற்கு பகுதியிலிருந்து வரும் நோயாளர்களே அதிகமாக காணப்படுகின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து இவர்களுடன் கூட வசிக்கின்ற அல்லது இவர்களுக்கு அண்மையில் உள்ளவர்களும் இந்த நோயில் பாதிக்கப்படுவதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. அத்தோடு இதனைக் கட்டுப்படுத்தும் முகமாக எமது பிரதேசத்தில் தொடர்ந்து டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
அதன் ஒரு பகுதியாக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக முப்படையினரும், பிரதானமாக எமது கல்லடி இராணுவப் படைத்தளத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், எமது பிரதேச செயலகம், மட்டக்களப்பு மாநகர சபை போன்ற அனைவரும் இணைந்து இந்த துப்புரவுப் பணிகள், அதாவது டெங்கு குடம்பிகள் வாழும் பகுதிகளைச் சுத்தம் செய்து, இந்த குடம்பிகள் பெருகாவண்ணம் நாங்கள் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இன்று எமது போர்ட் பார்க் என்று கச்சேரிக்கு முன்னால் உள்ள பூங்கா பகுதி இராணுவ அணியினரால் கொள்கலன்கள் அகற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான கொள்கலன்கள் பிளாஸ்டிக் போத்தல்கள், டின்கள், சிரட்டைகள் போன்றவை அகற்றப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது. இது எமது பொதுமக்களால் வீசப்பட்ட கொள்கலன்களாகக் காணப்படுகின்றது.
ஆகவே நாங்கள் துப்புரவு செய்வதை நீங்கள் ஒத்துழைப்பு வழங்கி, மேலும் இந்த இடங்களில் இந்த குப்பைகள் சேராவண்ணம் அல்லது இந்த கொள்கலன்களை வீசா வண்ணம் நீங்கள் ஒத்துழைப்பதன் மூலமே எமது பகுதியில் இந்த டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் நாங்கள் வெற்றி அடைய முடியும்.
இந்த காலப்பகுதி எமது பிரதேசத்தில் டெங்கு நோய் பரவுகின்ற காலப்பகுதி அல்ல. இருந்தாலும், நாட்டின் சில பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் கூட பதிவாவதால் எமது பிரதேசத்திலும் நோயாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவிட்டது. எதிர்வரும் காலத்தில் மழை தொடங்கும்போது இதைவிட மோசமான நிலைமையை நாங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும். அதற்கு முன்னாயத்தமாகவே எமது மட்டக்களப்பு சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் ஏனைய பங்குதாரர்களுடன் இணைந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுகின்றது.
ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் எங்களுக்குப் பூரண ஆதரவு தந்து, இந்த பொது இடங்கள், உங்களுடைய வளவுகள், வெற்றுக்காணிகள், வீடுகள், பூட்டி இருக்கின்ற வீடுகள், பொது இடங்கள், நிறுவனங்கள், அரசு சார்ப்பற்ற இடங்கள் அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் அல்லது ஒரு கிழமையில் ஒரு சில மணித்தியாலங்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு, டெங்கு குடம்பிகள் பெருகுகின்ற இடங்களை முற்றாக அகற்றி எமது பிரதேசத்திலும் எதிர்காலத்தில் பாரிய நோய்த்தொற்று ஏற்படாமல் அமைவதற்கு அனைவரும் ஒத்துழைப்பை கேட்டு நிக்கின்றோம்.
தற்போது நாங்கள் இதற்கு அப்பால் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இந்த வாரம் மட்டும் எமது சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தினால் பொலிஸாரின் உதவியுடன் 35-க்கும் மேற்பட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மேலும் வலுப்படுத்தப்படும் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த மூன்று மாதங்களாக, 59 நோயாளர்கள் அறியப்பட்டுள்ளனர். அது கடந்த ஜூன் மாதம் 62 நோயாளர்களாகக் காணப்பட்டு, தற்போது இந்த 9 நாளுக்குள்ளும் எங்களுக்கு இந்த நோயாளர் எண்ணிக்கை 35-ஐ தாண்டிவிட்டது. ஆகவே இது மிகவும் வேகமான அதிகரித்துக்கொண்டிருக்கின்ற அளவாகக் காணப்படுகின்றது.













