ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மீது, திங்கட்கிழமை (06) இரவு ஈரானின் புரட்சிகரப் படையினர் குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெளியான அந்த அறிக்கையின்படி, தாக்குதலினால் இரண்டு வணிகக் கப்பல்கள் பலத்த சேதமடைந்தன.
ஆனால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஓமனின் லிமாஹ் (Limah) பகுதிக்குக் கிழக்கே அடையாளம் தெரியாத ஒரு பொருள் தாக்கியதில் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று தீப்பிடித்ததாக பிரிட்டனின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
லிமாஹ் (Limah) பகுதிக்குக் கிழக்கே சுமார் 8 கடல் மைல் (15 கி.மீ) தொலைவில் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த எண்ணெய் கப்பலின் இடது பக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான அமைப்பு (UKMTO) செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தெரிவித்தது.
இதில் உயிரிழப்புகளோ அல்லது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்போ ஏற்பட்டதாகத் தகவல் ஏதுமில்லை.
ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள குறுகிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள கப்பல் போக்குவரத்திற்கு உள்ள ஆபத்துகளை இந்த அறிக்கைகள் வலியுறுத்தின.
உலகளாவிய எண்ணெய் நுகர்வில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீர்வழிப்பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. பாதுகாப்பான பயணத்திற்கான வழிமுறைகளை உள்ளடக்கிய இடைக்கால ஒப்பந்தம் இருந்தபோதிலும், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய போரின்போது வணிகக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் மோதல் தூண்டப்பட்டதைத் தொடர்ந்து, இராஜதந்திரத்திற்கு வழிவகுக்கும் நோக்கில் 60 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், நீடித்த அமைதியை நோக்கிய எந்தவொரு வெளிப்படையான முன்னேற்ற அறிகுறியும் இன்றி, அமெரிக்க-ஈரான் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் முடிவடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.










