மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியாது என வெளியாகும் கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அரசுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும்,
அதற்கான பணம் ஏற்கனவே வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“தேர்தலுக்கான பணம் ஒருவேளை ஒதுக்கப்படாமல் இருந்திருந்தாலும் கூட, மக்கள் இறையாண்மையை மதித்துத் தேர்தலை நடத்துவதற்காகத் தேவை ஏற்படும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு ஒன்றின் மூலம் அதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள அரசு தயாராகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.
எனவே பணம் ஒரு தடையல்ல.” – என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது உள்ள முக்கிய தடை தேர்தல் சட்ட விதிகளில் உள்ள முரண்பாடுகளும் சிக்கல்களுமே என்றும் அவர் விளக்கமளித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தச் சட்டச் சிக்கல்களுக்குத் தகுந்த தீர்வு காண்பதற்காகத் தற்போது விசேட நாடாளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழு செயற்பட்டு வருகின்றது.
இது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றக் குழுவின் மூலம் தேவையான சட்டக் கட்டமைப்பு சீர்செய்யப்பட்டுத் தயாரிக்கப்பட்டவுடன்,
மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
தற்போதைய அரசு தேர்தல்களைக் கண்டு அஞ்சுவதில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர்,
மக்களின் தேர்தல் உரிமைகளை அரசு எப்போதும் பாதுகாக்கும் என்றும் கூறினார்.









