வடமாகாணத்தில் இராணுவ வசமுள்ள காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்திற்கு இன்று (26) வருகை தந்திருந்த பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரும், முப்படை தளபதிகளும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரன் இளங்குமரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன் உள்ளிட்ட பல அதிகாரிகள் பலாலி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
அத்துடன், வயாவிளான் இராணுவ வைத்தியசாலையில் காணிகள் விடுவிப்பது தொடர்பாக ஆராய்ந்தனர்.
அதேவேளை, பலாலியில் உள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தையும் பார்வையிட்டனர்.
அதன் பின்னர், மதியம் 3 மணியளவில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் பின்னர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
கள ஆய்வு செய்ததுடன், கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
அதன் பின்னர் மக்களின் காணிகள் மக்களுக்கே என்ற நோக்கமும் குறிக்கோளுக்கும் அமைவாக வடமாகாணத்தில் பல்வேறு இடங்களில் காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
அதே நேரம், பலாலியில் உள்ள பாடசாலை மற்றும் ஆலயங்களும் விடுவிக்கப்படவுள்ளதுடன், பாடசாலை மற்றும் ஆலயத்தை புனரமைப்பு செய்வதற்கான நிதி உதவிகளையும் இராணுவத்தினர் வழங்குவதாக தெரிவித்தனர்.
அதேவேளை, கீரிமலை மற்றும் வல்லை வீதிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.









