பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் டுபாயில் அங்குள்ள பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டுக்கு பாரியளவிலான போதைப்பொருட்களைக் கடத்தும் பிரதான ஐந்து கடத்தல்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் ஷிரான் பாசிக் என்பவர் டுபாயில் வைத்து அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விநியோகிக்கும் கடத்தல் வலையமைப்பின் பின்னணியில் செயற்பட்டு வந்த இவரை, டுபாய் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாகப் பொலிஸ் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டுள்ள ஷிரான் பாசிக், ஈரானிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வந்துள்ளமை புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவிலான இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பு காரணமாக, இவர் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினராலும் தேடப்பட்டு வரும் மிக முக்கிய குற்றவாளியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலிருந்து தப்பியோடி டுபாயில் தஞ்சமடைந்திருந்த ஷிரான் பாசிக், அங்கு பெரும் கோடீஸ்வரரைப் போலத் தன்னைத் காண்பித்துக்கொண்டு, தலைமறைவாக இருந்ததாக அறியப்படுகிறது. அவர் டுபாய் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இந்த கைது நடவடிக்கை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் டுபாய் அரசாங்கத்தினால் இலங்கை அதிகாரிகளுக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.










