நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாண்டுவ – மொனராகலை வீதியின் 282ஆம் மைல்கல் கம்பத்திற்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
மொனராகலை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஓட்டுநரால் கட்டுப்படுத்த முடியாமல் எதிர்த்திசையில் வந்த ஓட்டோவுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படவல வீதிச் சந்திக்கு அருகில், இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹிங்குல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










