“நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற ஐக்கிய மக்கள் சக்தி கனவு காண்பதாக ஆளுந்தரப்பு கூறுவது முற்றிலும் நகைப்புக்குரியது. இந்தத் திறமையற்ற அரசைக் கவிழ்க்க வேண்டிய தேவை எமக்கில்லை, இவர்களின் நிர்வாகச் சீர்கேட்டினால் மக்களே இவர்களை விரட்டியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார பதிலடி கொடுத்துள்ளார்.
ஆளுந்தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது என எதிர்க்கட்சிகள் பொய் கூறுகின்றன என்று ஆளுந்தரப்பு குறிப்பிடுவதை ரஞ்சித் மத்தும பண்டார கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் ஒருவேளை உண்பதற்கே வழியின்றித் தவிக்கின்றார்கள். விவசாயிகளுக்கு உரம் இல்லை, மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது, எரிபொருட்களின் விலையும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. இது நாங்கள் கூறும் பொய் அல்ல, நாட்டு மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் நிஜமான கண்ணீர். மக்களின் இந்த அவல நிலையை மறைக்கவே ஆளுந்தரப்பு எம் மீது பழிபோடுகின்றது.
அரசுக்கு இருக்கும் மூன்றிலிரண்டு நாடாளுமன்றப் பெரும்பான்மை பலம் குறித்து ஆளுந்தரப்பு பெருமை பேசுகின்றது. இந்த அரசு மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றார்கள் இல்லை.
ஒரு வருடத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது தேர்தலைக் காலவரையறையின்றி பிற்போடுகின்றார்கள். அரசில் இல்லாதவர்கள் 2027 இல் தான் தேர்தல் நடக்கும் என்கிறார்கள்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் என்பது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே தவிர, மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதற்கோ அல்லது எதிர்க்கட்சிகளைத் திட்டுவதற்கோ அல்ல என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் ஜனநாயகப் பாதையிலேயே பயணிக்கும் ஒரு கட்சி. குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டிய தேவை எங்களுக்குக் கிடையாது.
நாட்டின் பிரதமரும் ஜனாதிபதியும் தற்போதைய கடுமையான நெருக்கடி நேரத்தில் நாட்டைப் பாராமரிப்பதை விட்டுவிட்டு, ஒருவர் வெளிநாட்டுப் பயணங்களிலும், மற்றவர் சுற்றுலாத் தலங்களிலும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இந்தத் தொலைநோக்கற்ற, திறமையற்ற நிர்வாகமே இந்த அரசை வீழ்த்தப் போதுமானது. எனவே, குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய தேவை எமக்கில்லை. மக்களின் பேராதரவுடன் முறையான ஜனநாயகத் தேர்தல் மூலமே ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்.” – என்றார்.










