இந்தியாவுக்கு சென்று டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்க மறுத்ததன் பின்னர் பங்களாதேஷ் அணி நீக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட (U-19) அணியும் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
சிம்பாப்வேயில் நடைபெற்று வந்த இளையோர் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணி வெளியேறியுள்ள நிலையில், அந்தத் தோல்விக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் திட்டமிடப்பட்ட கடுமையான மற்றும் அநியாயமான பயண அட்டவணையே காரணம் என அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.இது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் ஹபிபுல் பஷார் கருத்துத் தெரிவிக்கையில்,
“வீரர்கள் அதிக சோர்வடைவதைத் தவிர்ப்பதற்காக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனது சொந்த நிதியில் உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.
மேலும், பிற முன்னணி அணிகளுக்கு வழங்கப்பட்ட பயண ஏற்பாடுகள் மிகவும் இலகுவாக இருந்ததாகவும் பங்களாதேஷ் குற்றஞ்சாட்டியுள்ளது.அதன்படி,இந்திய அணி தனது அனைத்துப் போட்டிகளையும் ஒரே இடமான புலவாயோவில் விளையாடியதாகவும்,அவுஸ்திரேலிய அணி தனது பெரும்பாலான போட்டிகளை நமீபியாவின் வின்ட்ஹோக் நகரிலேயே நடத்தியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, இங்கிலாந்து அணி சுப்பர்-6 சுற்றுக்கு முன்னதாக நான்கு நாட்கள் போதிய ஓய்வை பெற்றதாகவும் பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.“தொடர் ஆரம்பிக்கும் முன்னரே இது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் நாங்கள் முறையிட்டோம். எனினும், அவர்கள் எமது கோரிக்கைகளைக் கவனத்தில் எடுக்கவில்லை” என ஹபிபுல் பஷார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.










