அரச நிதியில் வீதி புனரமைப்பு: தொண்டமனாறு சந்தியில் அடிக்கல் நாட்டல்..!
அரசாங்கத்தின் திறைசேரி நிதியிலிருந்து, தொண்டமனாறு–வல்லை–துன்னாலை வீதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா, வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தி (NPP) அமைப்பாளருமான நிஷாந்தன் ஜனனி தலைமையில், தொண்டமனாறு சந்தியில் இன்று (பிற்பகல் 6.00 மணியளவில்) நடைபெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 3.9 கிலோமீற்றர் நீளமுடைய இந்த வீதி, ரூபா 252 மில்லியன் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி அபிவிருத்தி குழுத் தலைவருமான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு முதல் கல்லை நாட்டி வைத்தார்.
அத்துடன், வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நடராசா திருலிங்கநாதன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோளியூர் ரமணன், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான சாம், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்களான அன்பு மற்றும் திருமதி நிஷாந்தன் ஜனனி, சிகரம் அமைப்பின் வடக்கு மாகாண அமைப்பாளரும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான ஆசிரியர் உதயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.
மேலும், இந்நிகழ்வில் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த வீதி கடந்த அரசாங்க காலத்தில் புனரமைப்பிற்கென அடிக்கல் நாட்டப்பட்டிருந்த போதிலும், பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

