“பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கையை அரசு தீர்மானிக்கப் போவதில்லை. மாறாக சட்ட அமுலாக்க நிறுவனங்களே அதனைத் தீர்மானிக்கும்.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில்,
“பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அல் ஜசீரா நேர்காணலில் தெரிவித்திருந்தார். எனவே, அது செல்லுபடியாகாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனவேதான் மும்மொழிகளிலும் அந்த அறிக்கையை நாம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம்.
பட்டலந்த வீடமைப்புத் திட்டம், சட்ட விரோதமாக தடுத்து வைத்தல் பிரதேசம் மற்றும் வதை முகாம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையிலுள்ள காரணிகள் தொடர்பில் மேலும் ஆழமாக மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காகக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
மேலும் இந்த அறிக்கை சட்டமா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள குழுவின் பரிந்துரைகள் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
எனவே, பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கையை அரசு தீர்மானிக்கப் போவதில்லை. மாறாக சட்ட அமுலாகக்க நிறுவனங்களே அதனைத் தீர்மானிக்கும்.” – என்றார்.