சைவத் திருக்கோவில்களின் திருவிழாக்களில் களியாட்டங்களை முற்றுமுழுதாக நிறுத்துங்கள்.!
நேற்று இரவு எமது யாழ். மாவட்ட சைவத் திருக்கோவில் ஒன்றில் இடம்பெற்ற திருவிழா நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றமை மிகுந்த துயரத்தைத் தோற்றுவித்துள்ளது என
தென் கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த மாதங்களில் சில ஆலய திருவிழாக்களில் மிகவும் விரும்பத்தகாத ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் சைவசமயிகளிடையே பெருமை விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
சைவ பரிபாலன சபை, இந்து கலாச்சார திணைக்களம் என்பன சில ஒழுங்குவிதிகளை, கட்டுப்பாடுகளை ஏற்கனவே திருக்கோவில்களிடம் வலியுறுத்தி உள்ளன அது வரவேற்கத்தக்கது.
ஆதலினால் அன்புக்குரிய ஆலய அறங்காவலர்களே எக்காரணம் கொண்டும் ஆலய திருவிழாக்களில் இவ்வாறான எந்த களியாட்டங்களிற்கோ அதிக வெளிச்சம் பாய்ச்சல் நிகழ்வுகளிற்கோ ஒலி எழுப்புதலுக்கோ இடம் அளிக்காதீர்கள்.
இந்த விடயத்தை மிகவும் சிரத்தை எடுத்து தலைமேற்கொண்டு கோவிலை தழுவிய குடிகள் குடிகளை தழுவிய கோவில் என்பதற்கு உயிர் கொடுக்குமாறு அனைத்து ஆலயம் சார்ந்த சைவ பெருமக்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.
அதே நேரம் சட்டத்தை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு சகல சம்பந்தப்பட்ட தரப்புக்களையும் கோருவதுடன் அவர்களிற்கு அனைத்து சைவ சமயிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டு கொள்கின்றோம்.
பாதிக்கப்பட்ட பக்தர்கள் விரைந்து குணம்பெற அன்பே உருவான இறை சிவனை பிரார்த்திக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.