பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மருத்துவப் பரிசோதனைக்காக வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அவரது கட்சி தெரிவித்துள்ளது.
சிறைவாசத்தின் போது அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகக் கூறி வந்த ஆதரவாளர்களின் நீண்டகாலக் கோரிக்கை இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை உயர் நீதிமன்றத்தின் இந்த வார உத்தரவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் இம்ரான் கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து முரண்பாட்டில் இருந்து வரும் அவரது கட்சிக்கும், பாகிஸ்தானின் சக்திவாய்ந்த இராணுவ அமைப்பிற்கும் இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரு சாத்தியமான முதல் படியாக இது கருதப்படுகிறது.
சிறைவசத்தின் போது, அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், வலது கண்ணில் கணிசமான அளவு பார்வையை இழந்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
ஆனால், உடனடி சிகிச்சை தேவைப்படும் வகையிலான எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று மருத்துவ அறிக்கைகள் தெரிவிப்பதாக அரசு கூறியுள்ளது.
73 வயதான முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரை 48 மணி நேரத்திற்குள் தலைநகரில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றவும், அவரது தனிப்பட்ட மருத்துவர் அடங்கிய மருத்துவக் குழுவின் சிகிச்சையைப் பெற அவரை அனுமதிக்கவும் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இம்ரான் கான் 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் ஆட்சியை இழந்ததிலிருந்து, அரசுப் பரிசுகள் மற்றும் சட்டவிரோதத் திருமணம் தொடர்பான வழக்குகள் உட்படப் பல வழக்குகளை கான் எதிர்கொண்டு வருகிறார்.
சில வழக்குகளில் அளிக்கப்பட்ட தண்டனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன அல்லது இரத்து செய்யப்பட்டுள்ளன.
மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன.
எனினும் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.