இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!
ஆனமடுவ – புத்தளம் வீதியில் தோனிகல பகுதியில் நேற்று திங்கட்கிழமை (20) புத்தளத்தில் இருந்து ஆனமடுவ நோக்கிப் பயணித்த பேருந்தும், எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உரியாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கொழும்பு – குருநாகல் வீதியில் நில்பானாகொட பகுதியில் மினுவாங்கொடையில் இருந்து திவுலப்பிட்டிய நோக்கிப் பயணித்த கொள்கலன் பாரவூர்தி ஒன்று, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் பலத்த காயங்களுக்கு உட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தின் பின்னர் தப்பிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி மற்றும் அதன் ஓட்டுநர் பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவங்கள் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.