குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி இஸ்ரேலியப் படையினரால் கடத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரபல பாலஸ்தீன மருத்துவர் ஹுசாம் அபு சபியாவின் உடல்நிலை கடுமையாக மோசமடைந்துள்ளதாக அவரது மகன் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
555 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பும் எச்சரித்துள்ளது.
வடக்கு காஸாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநரான மருத்துவர் ஹுசாம் அபு சபியா, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட சிறையொன்றின் தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்ட பின்னர், அவர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அவரது மகன் எலியாஸ் அபு சபியா வெளியிட்ட காணொளிப் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
தமது தந்தையால் சரியாக சுவாசிக்கவோ, பேசவோ முடியவில்லை. எருசலேமில் நடைபெற்ற கடந்த நீதிமன்ற அமர்வுக்குப் பின்னர், சிறைக்குள் அவர் எதிர்கொண்ட சித்திரவதைகள், வலி மற்றும் இரத்தக் கறைகளால் அவரது முகம் சிதைந்து போயிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024 டிசம்பர் 27 அன்று, வடக்கு காசாவின் சுகாதாரக் கட்டமைப்பின் மீதான தாக்குதல்களை இஸ்ரேலியப் படையினர் தீவிரப்படுத்தியபோது, பணியில் இருந்த அபு சபியா கைது செய்யப்பட்டார்.
இஸ்ரேலிய அதிகாரிகள் அபு சபியா மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டையும் பதிவு செய்யவில்லை. பாலஸ்தீனர்களை விசாரணையின்றி நீண்ட காலம் தடுத்து வைப்பதற்காக இஸ்ரேல் பயன்படுத்தும் “சட்டவிரோதப் போராளி” என்ற பிரிவின் கீழ் அவர் வகைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி இஸ்ரேலிய படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 பாலஸ்தீன மருத்துவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.










