உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் குறைந்து வரும் நிலையில், உள்நாட்டு எரிபொருள் விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன என்பது குறித்த முழுமையான விவரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை கடுமையாக விமர்சித்தார்.
எரிபொருள் இறக்குமதி செலவு, வரிகள், போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் இலாப வீதங்கள் உள்ளிட்ட இறுதி சில்லறை விலை நிர்ணயத்தின் அனைத்து கூறுகளையும் அரசாங்கம் வெளியிட வேண்டும்.
அரசாங்கம் மானியம் வழங்குவதாகக் கூறினால், அதனை வெறும் கோஷங்களாகக் கூறாமல் கணக்குகளுடன் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும்.
உலக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பிராந்திய நாடுகள் எரிபொருள் விலைகளைக் குறைத்து வரும் வேளையில், இலங்கையில் மாதந்தோறும் விலைகள் உயர்த்தப்படுவது அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தையே காட்டுகிறது.
தேர்தல் வாக்குறுதிகளை மீறுவதில் இந்த அரசாங்கம் சாதனை படைத்துள்ளது. வேலைவாய்ப்பு கோரும் பட்டதாரிகள் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்குப் பதிலாக அரசாங்கம் அடக்குமுறையைப் பயன்படுத்துகிறது.
உணவு இறக்குமதிக்காக அந்நியச் செலாவணியை வீணடிப்பதை நிறுத்தி, உர மானியம் வழங்கி உள்நாட்டு விவசாயிகளையும் மீனவர்களையும் பலப்படுத்த வேண்டும். அத்துடன், நாடு முழுவதும் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கமும் உள்ளூராட்சி அமைப்புகளும் தவறிவிட்டன.
அரசாங்கம் தனது தோல்விகளின் சுமையை மக்கள் மீது சுமத்துவதை நிறுத்திவிட்டு, பொருளாதார நிவாரணம், உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொதுச் சுகாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ மேலும் வலியுறுத்தினார்.









