நாடு முழுவதும் தற்போது மிகத் துரிதமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக 2026.06.15 முதல் 20.06.2026 வரை முன்னெடுக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு கொட்டகலை பிரதேச சபை, கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம், கொமஷல் இராணுவப் படையணி என்பன சிரமதானம் மற்றும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தன.
இந்த வேலைத்திட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர், கௌரவ உறுப்பினர் மற்றும் கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவருமான லெச்சுமண் விஸ்வநாதன், உறுப்பினர் அமித்த ஆனந்த, உறுப்பினர் கணேசன் ராஜேந்திரன், உறுப்பினர் கணபதி கண்ணதாசன், கௌரவ உறுப்பினர் திருமதி ரசிக்கா ஜீவனி, கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் திரு வி. விஜேசுந்தரம் பொது சுகாதார பரிசோதகர்கள், கொமஷல் இராணுவப் படையணியை சேர்ந்த இராணுவத்தினர், கொட்டகலை நகர வர்த்தகர்கள், சுகாதார சேவையாளர்கள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் என்போர் கலந்து கொண்டனர்.
இதன்போது கொட்டகலை நகரத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.












