2026ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினராலும், மாணவர் அமைப்புகளினாலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிராகரித்துள்ள கல்வி அமைச்சு, பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்ட் மாதத்தில் நடக்கும் என்றும் உத்தியோகபூர்வமாக விளக்கமளித்துள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் அடிப்படையில், உயர்தரப் பாடத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச நாட்களின் எண்ணிக்கை 300 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்குப் போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதில் வழங்கும் வகையில், கல்வி அமைச்சு பின்வரும் புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளது:
முதலாம் தடவை பரீட்சார்த்திகள்
2026ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு முதல் தடவையாகத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதி வரை மொத்தம் 343 பாடசாலை நாட்கள் கிடைக்கப்பெறுகின்றன. இது பாடத்திட்டத்தை முடிக்கத் தேவையான நாட்களை விட 43 நாட்கள் அதிகமாகும்.
மறுமுறை பரீட்சார்த்திகள்
இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவையாக இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு, கடந்த பரீட்சையின் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட தினத்திலிருந்து இம்முறை பரீட்சை ஆரம்பமாகும் நாள் வரையில் 4 மாதங்களும் 10 நாட்களும் (130 நாள்களுக்கு மேல்) நீண்ட இடைவெளி கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், பாடசாலை மாணவர்களுக்கும் ஏனைய பரீட்சார்த்திகளுக்கும் பாடத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்கும், தயாராவதற்கும் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.










