சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில், அல்குர்ஆன் மத்ரஸா ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் கருத்தரங்கும் மாலையில் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸா நிர்வாகிகளுடனான சந்திப்பும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது – மாளிகைக்காடு கிளையின் காரியாலயத்திலும் 06 ஆம் திகதி சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது – மாளிகைக்காடு கிளையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் அஷ்ஷேய்க் எம்.எம். மீராஸாஹிப் சலீம் (ஷர்க்கி) தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வுகளுக்கான அனுசரணையை சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவரும் பைத்துஸ்ஸகாத் நிறுவனத்தின் தலைவரும் வர்த்தக சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் வழங்கியிருந்தார்.
அல்குர்ஆன் மத்ரஸா கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கு, மத்ரஸா ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் மற்றும் கல்வி தரநிலைகள் தொடர்பான முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டிருந்தது.
நிகழ்வில் பிரதான வளவாளர்களாகவும் சிறப்பு விருந்தினர்களாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் செயலாளருமான அஷ்ஷெய்க் ஏ.சி.எம். பாஸில் (ஹுமைதி), குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் இணைப்பாளர் அஷ்ஷேய்க் அஃலம் (நூராணி), ஊடக இணைப்பாளர் அஷ் ஷெய்க் பஸால் (ஹுமைதி) மற்றும் கொழும்பு மாவட்ட பயிற்றுவிப்பாளர் அஷ்ஷெய்க் அஸ்வர் அலி (தப்லீகி) ஆகியோர் கலந்து கொண்டு வழிகாட்டல் உரைகளை வழங்கினர்.
நிகழ்வை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது – மாளிகைக்காடு கிளையின் செயலாளர் நப்றாஸ் ஹனீபா (ரஹ்மானி) நெறிப்படுத்தினார்.
இக்கருத்தரங்கில் மத்ரஸா ஆசிரியர்களின் கல்வி முறைகள், மாணவர் வளர்ச்சி அணுகுமுறைகள், கற்பித்தல் நுட்பங்கள் மற்றும் சமகால கல்வி சவால்களை எதிர்கொள்வது போன்ற விடயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வு, அல்குர்ஆன் கல்வி துறையில் தரநிலையை உயர்த்தும் நோக்குடன் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப ரீதியான மற்றும் கல்வி ரீதியான வழிகாட்டுதலை வழங்கியமை முக்கியமான முயற்சியாக அமைந்தது.



















