சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை நிறைவடைந்த பின்னர், 2028ஆம் ஆண்டில் நாடு எதிர்கொள்ளவிருக்கும் பாரிய கடன் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான கொள்கை ரீதியான நடவடிக்கைகளை அரசு இப்போதிலிருந்தே எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற, இலங்கை அமரபுர அரியவம்ச சத்தம்ம யுத்திக பிரிவின் மகா நாயகர் பதவிக்கான சன்னஸ் பத்திரமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நாட்டின் வறுமை மட்டம் 30% ஆகவும், சிறார்களின் ஊட்டச்சத்துக் குறைபாடு 20% ஆகவும் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
2027 மார்ச் மாதத்துடன் இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு முடிவுக்கு வருகின்றது. அதன்பின்னர், நாட்டுக்குக் கிடைக்கும் விரிவுபடுத்தப்பட்ட கடன் வசதிகள் நிறுத்தப்படும். 2028 ஜனவரி முதல் 2.5 பில்லியன் முதல் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான வெளிநாட்டுக் கடன்களை நாடு திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் நாடு மீண்டும் ஆபத்தான பொருளாதாரப் புதைகுழியில் வீழும். எனவே, அத்தகைய இக்கட்டான சூழ்நிலை உருவாவதற்கு முன்பே, அதனைத் தவிர்ப்பதற்கான தகுந்த கொள்கை ரீதியான நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே எடுக்க வேண்டும்.
அன்று நம் நாடு நேரடி ஏகாதிபத்திய காலனித்துவத்திற்கு உட்பட்டது. இன்று அதற்குப் பதிலாக மறைமுக ஏகாதிபத்தியம் உலக அரசியலில் முன்னெடுக்கப்படுகின்றது.
அரசமைப்பின்படி நாம் இறையாண்மையுள்ள நாடாக இருந்தாலும், தற்போதைய பொருளாதாரச் சூழலில் உலகின் பல்வேறு தரப்புகளுடன் நாம் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களில் 90% இற்கும் அதிகமானவை, நமது நாட்டின் இறையாண்மையுடன் தொடர்புடைய நிபந்தனைகளை மீறியே நடைபெறுகின்றன. நமது நாடு இன்று பூகோள அரசியலின் ஆடுகளமாக மாறியுள்ளது.
நாட்டில் நாளுக்கு நாள் வேலையிழப்புகள் அதிகரித்து, பல துறைகளும் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இந்த ஆபத்தான சவால்களை எதிர்கொள்ள நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டைப் பாதுகாக்கும் பொதுவான வேலைத்திட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அன்று நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டபோது, மகா சங்கத்தினர் மன்னர்களுடன் கைகோர்த்துத் தேசத்தைக் காப்பாற்றினர். அதேபோன்றதொரு வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் தற்போதைய மறைமுக ஏகாதிபத்திய சவால்களை வெல்லவும் மகா சங்கத்தினர் வழங்க வேண்டும். பொறுப்பான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் நாட்டு நலனுக்கே முன்னுரிமை அளிக்கும்.” – என்றார்.


















