ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்குப் பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அதன் முதலாம் ஆண்டில் மிக உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒன்பது பிரதேச செயலகங்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்று சனிக்கிழமை கொழும்பு மிலோதா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சபாநாயகரும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை உறுப்பினருமான ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
பொதுமக்களுக்கு மிகவும் திறமையான மற்றும் விரைவான சேவையை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பரவலாக்கல் திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டில் மிகச் சிறந்த முறையில் பணியாற்றிய பின்வரும் பிரதேச செயலகங்கள் இதன்போது பாராட்டித் திலகமிடப்பட்டன.
கொழும்பு மாவட்டம்: ஹோமாகம, கடுவெல, கஸ்பேவ பிரதேச செயலகங்கள்.
கம்பஹா மாவட்டம்: கம்பஹா, பியகம, மஹர பிரதேச செயலகங்கள்.
களுத்துறை மாவட்டம்: பாணந்துறை, பேருவளை, பண்டாரகம பிரதேச செயலகங்கள்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷான் கமேஜே குறிப்பிடுகையில்,
“கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் கொழும்பை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வந்த ஜனாதிபதி நிதியத்தை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கிராமத்துக்குக் கொண்டு சென்று கடந்த பெப்ரவரி 07 ஆம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.
இதற்கு முன்னர் ‘முடிந்தால் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்ற இழுபறி நிலையில் இருந்த ஜனாதிபதி நிதியத்தை, ‘நாங்கள் உங்களுக்கு வழங்குகின்றோம்’ என்ற மக்கள் நலன் சார்ந்த அர்த்தத்துக்கு மாற்றுவதற்கு தற்போதைய அரசால் முடிந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் மருத்துவ உதவிகளும் இந்த அமைப்பின் கீழ் பரவலாக்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட கள அதிகாரிகள் எவ்வித தயக்கமுமின்றி, தடைகளுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாலேயே இது சாத்தியமானது. இந்த அதிகாரிகள் இல்லையெனில், ஏழை மக்கள் கொழும்புக்கே அலைந்து திரிய வேண்டியிருந்திருக்கும்.
கடந்த காலத்தில் அந்தஸ்துக்கு ஏற்ப உதவித்தொகை மாறுபட்ட நிலை இருந்ததுடன், சில உதவிகள் எங்கும் பதிவு செய்யப்படவும் இல்லை. ஆனால் இப்போது, தகுதியுடைய அனைவருக்கும் சமமான முறையில், வெளிப்படைத்தன்மையுடன் உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தைத் தொடர்ந்து, இலங்கையின் ஏனைய அனைத்து மாகாணங்களில் உள்ள தகுதியான பிரதேச செயலகங்களையும் பாராட்ட நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.” – என்றார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களான எஸ். சி. மாயாதுன்ன, பேராசிரியர் ஜே. ஜயகொடி, அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார மற்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே, களுத்துறை மாவட்ட செயலாளர் எச். எம். எஸ். பி. ஹேரத், கம்பஹா மேலதிக மாவட்ட செயலாளர் ஜே. டபிள்யூ. எஸ். கித்சிறி உட்பட பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், விடயப் பொறுப்பு அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




















