தெற்காசிய பிராந்தியத்தின் எதிர்கால பொருளாதார வெற்றியை, அந்தந்த நாட்டு அரசுகளால் மாத்திரம் தீர்மானித்துவிட முடியாது என்றும், பிராந்தியத்தின் தொழில்முனைவோர், வணிக சமூகம் மற்றும் முதலீட்டாளர்களே அதனைத் தீர்மானிக்கின்றார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கொழும்பு சின்னமன் லைஃப் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ‘வெஸ்டிஜ் முதலீட்டாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்’ மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்டகால கலாச்சார, ஆன்மீக மற்றும் பொருளாதார உறவுகள் காணப்படுகின்றன. தற்போதைய சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான ‘யுபிஐ’ பணப்பரிவர்த்தனை ஒருங்கிணைப்பு மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சக்தி இணைப்புத் திட்டங்கள் போன்ற முயற்சிகள் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இது வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு முன்னெப்போதும் இல்லாத புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அண்மைக்கால பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், வெறும் சுதந்திர சந்தை முறையை மட்டும் நம்பியிருக்க முடியாது. சுதந்திர சந்தையின் வினைத்திறனோடு, சமூக நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் சம வாய்ப்புகளை உள்ளடக்கிய ‘சமூக சந்தைப் பொருளாதார’ முறையொன்றை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரையும் சென்றடையக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
தானியங்கிமயம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உலகம் வேகமாக மாறிவரும் தற்போதைய யுகத்தில், மனிதர்களுக்கு இடையிலான நம்பிக்கை, வலுவான நுகர்வோர் உறவுகள் மற்றும் தரமான சேவை என்பனவே எந்தவொரு வணிகத்துக்கும் மிக மதிப்புமிக்க சொத்துக்களாக மாறியுள்ளன. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் செல்வ உற்பத்தியில் தொழில்முனைவோரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.
தெற்காசியாவின் பொருளாதார மறுமலர்ச்சியானது, இந்தியாவினதும் இலங்கையினதும் முயற்சியாண்மைகள் மற்றும் தொழில்முனைவோரின் இயங்குதளத்திலேயே தங்கியுள்ளது.
எனவே, புத்தாக்க சிந்தனைகளுடன் முதலீட்டாளர்களும், தொழில்முயற்சியாளர்களும் இலங்கையிலுள்ள வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்க முன்வர வேண்டும்.” – என்றார்.

















