இலங்கையில் 2029ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாவார் என்றும், நாட்டின் நலனுக்காக அந்தச் சவாலை அவர் ஏற்பார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கை இரண்டாவது தடவையும் வங்குரோத்து நிலையை அடைந்தால், அதிலிருந்து மீண்டெழுவது மிகவும் கடினம் என ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார். எனவே, அவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்படுவதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டால், அவர் சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தி நாட்டுக்காகச் சிறந்த பலன்களைப் பெற்றுக்கொடுப்பார்.
மக்களிடம் உண்மைகளைக் கூறிக்கொண்டே ஆட்சியைப் பொறுப்பேற்க வேண்டும். தம்மால் நெருக்கடிகளைத் தீர்க்க முடியும் என்பதைச் செயலில் காட்டிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே ஆவார். அவரது பொருளாதார மீட்சித் திட்டங்களைச் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கூடப் பாராட்டியுள்ளனர்.
நாட்டை மீட்டெடுக்கும் இந்த முக்கிய பயணத்தில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் இணைந்துகொள்வார். தேவைப்பட்டால் அவரைப் பலவந்தமாகவேனும் நாம் மீண்டும் அழைத்து வருவோம்.
பொருளாதார நெருக்கடியை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு கட்டத்தில், நாட்டில் மீண்டும் ஒரு புரட்சி வெடிக்கும். கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்த கிரீஸ் நாட்டில் குறுகிய காலத்தில் நான்கு தடவைகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இலங்கையிலும் தற்போது புதியதொரு அரசியல் கலாச்சாரமே நிலவுகின்றது. எனவே, 2029ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியேற்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.” – என்று ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.










