சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கிரிவெஹெர ராஜமகா விகாரைக்கு நேற்று விஜயம் செய்து விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கிரிவெஹெர ராஜமகா விகாரையின் விஹாராதிபதியும், ருஹுனு மாகம்பட்டுவவின் பிரதம சங்கநாயக்கருமான வண. கோபவக்க தம்மிந்த நாயக்க தேரரை நலம் விசாரித்து, அவரிடம் ஆசி பெறுவதற்காகவே அமைச்சர் இந்தச் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.
இச்சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் குறித்தும், தேசிய சுகாதாரத் துறையின் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் விகாராதிபதியுடன் அமைச்சர் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அவருடன் வருகை தந்த குழுவினருக்கு நாயக்க தேரர் ஆசி வழங்கி, எதிர்காலச் செயல்பாடுகளுக்கான அறிவுரைகளையும் வழங்கினார்.
இச்சந்திப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “நாட்டினதும் மக்களினதும் செழிப்புக்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும் மகா சங்கத்தினரின் சமூகப் பொறுப்பைக் கருத்திற்கொண்டு வணக்கத்திற்குரிய தேரர் வழங்கிய அறிவுரைகளும் ஆலோசனைகளும், அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன” என்று குறிப்பிட்டுத் தனது நன்றியறிதலைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன, கதிர்காம பிரதேச சபையின் தலைவர் எச். என். டி. ஹெரத் உட்படப் பல முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.











