யாழ்ப்பாணம் – சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் நூதன முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர், 1800 போதை மாத்திரைகளுடன் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு மேற்கொண்ட விசேட நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் தரப்பு தகவலின்படி, யாழ் நகரப் பகுதியில் “ஒன்லைன் கொரியர் சேவை” ஊடாக போதைப்பொருட்கள் மறைமுகமாக கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனவிரத்னவின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வில், கொழும்பிலிருந்து பொதியாக அனுப்பப்பட்ட ஒரு பார்சல் யாழ் குருநகர் பகுதியில் உள்ள தபால் நிலையத்துக்கு வந்தது கண்டறியப்பட்டது.
அந்தப் பொதியை பொலிஸார் சோதனை செய்த போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1800 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், அந்த மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.










