வடக்கு மாகாணத்தின் நல் இணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அழைப்பு விடுத்தார்.
புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆளுநர் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் பெருமக்கள் கொண்டாடும் ஹஜ் திருநாளை முன்னிட்டு, வடக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் சமூகத்தினருக்கும், ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் எனது அன்பான, மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஹஜ் பெருநாளானது, இப்ராஹீம் நபி அவர்களின் உன்னத தியாகத்தையும், அசைக்க முடியாத உன்னத இறை நம்பிக்கையையும் நினைவுகூரும் மிகவும் புனிதமான, ஆழமான மத முக்கியத்துவம் வாய்ந்த திருநாளாகும்.
தமக்குச் சொந்தமான அனைத்தையும் இறைவனின் விருப்பத்துக்காக அர்ப்பணிக்கும் உன்னத மனநிலையை இந்தத் திருநாள் அகில உலகுக்கும் எடுத்துரைக்கின்றது.
நமது வடக்கு மாகாணமானது பல்லின மற்றும் பல்மத மக்கள் தொன்றுதொட்டு ஒன்றிணைந்து வாழும் ஒரு வரலாற்றுப் பூமியாகும்.
இந்த அன்பான மண்ணில், ஹஜ் பெருநாளின் உன்னத செய்தியான சகோதரத்துவம், ஒற்றுமை, பரஸ்பர இரக்கம் மற்றும் சமாதானம் ஆகிய மதிப்புமிக்க கொள்கைகளை நாம் அனைவரும் ஒன்றாக உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
தியாகத்தையும் கருணையையும் மையமாகக் கொண்ட ஹஜ் பெருநாளின் செய்தியானது, சமூக நல்லிணக்கத்தையும், அமைதியையும் வளர்க்கும் ஒரு உன்னதமான வழிகாட்டியாக அமைகின்றது.
இப்பெருநாளில் ஏழை எளியோருக்கு உதவிக்கரம் நீட்டி, வறியவர்களுக்கு உணவளித்து, அனைவரும் இணைந்து மகிழ்வோடு கொண்டாட வேண்டும் என வேண்டுகின்றேன்.
நீண்டகாலப் போர்க்காலப் பாதிப்புகளிலிருந்து மீண்டு, சமாதானமான, வளமான, அபிவிருத்தியடைந்த ஒரு மாகாணமாக வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்பும் தற்போதைய பயணத்தில், இம்மாகாண மக்கள் அனைவரும் எவ்வித பேதமுமின்றிச் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வது இன்றியமையாததாகும்.
ஹஜ் பெருநாளின் உன்னத மதிப்பீடுகளே இந்த ஒற்றுமைக்கு வழிகாட்டும் ஒளியாக அமையும் என நான் திடமாக நம்புகின்றேன்.
இந்த புனித ஹஜ் பெருநாளானது உங்கள் அனைவரினதும் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியும், அமைதியும், சுபீட்சமும், ஆசீர்வாதமும் நிறைந்ததொரு நன்னாளாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
அனைவருக்கும் எனது இனிய ‘ஈத் முபாரக்’ வாழ்த்துக்கள்!” – என்று குறிப்பிட்டுள்ளார்.










