“நமது நாட்டின் அரசமைப்பில் அடிப்படை உரிமைகளின் கீழ் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக, பொருளாதார, சமூக, சுகாதார மற்றும் கல்வி உரிமைகள் சேர்க்கப்பட வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். இவை அடிப்படை மனித உரிமைகளாக மாற்றப்படும் போதே, மாதவிடாய் வறுமையைப் போலவே நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வுகளைக் காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் மாதவிடாய் சுகாதார நலன் மற்றும் அது சார்ந்த சவால்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், மருத்துவ நிபுணர்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,
“நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 52 சதவீதமானோர் பெண்களாகவே காணப்படுகின்றனர். இவ்வாறானதொரு சூழலில், மாதவிடாய் வறுமை என்பது நம் சமூகத்தில் பல்வேறு கோணங்களைக் கொண்ட ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது குறித்துப் பொதுவெளியில் பேசத் தயங்குவதும், கலாச்சார ரீதியாக பொருத்தமற்றது என்று கருதுவது தவறானதாகும். இந்தத் தேக்க நிலையிலிருந்து விடுபட்டு நாம் அனைவரும் முற்போக்கான சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
மருத்துவத் துறையின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நாட்டில் மாதவிடாய் சுகாதாரத்தைச் சரியாக முகாமைத்துவம் செய்யாமையினால் பெண்கள் பல்வேறு தீவிர சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் சுழற்சிக்கு உட்படும் 42 இலட்சம் பெண்களில் 70 சதவீதமானோர், அதாவது சுமார் 30 இலட்சம் பேர் முறையான சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை என்பதுடன், ஆபத்தான முறையற்ற வழிகளையே பின்பற்றுகின்றனர். இதனால் ஏற்படும் தீவிரப் பாதிப்புகளுக்கு உள்ளாகுபவர்களில் வெறும் 12.6 சதவீதமானோர் மாத்திரமே முறையான மருத்துவ உதவிகளைப் பெறுகின்றனர். இந்நிலையானது மாணவிகளின் பாடசாலை வரவைக் கணிசமாகக் குறைத்துள்ளது.
சக மாணவர்களால் கேலி செய்யப்படுவது, பாடசாலை சீருடைகளில் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் மன உளைச்சல் காரணமாக நாட்டில் 50 முதல் 60 சதவீதமான மாணவிகள் மாதவிடாய் நாட்களில் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். இதே நிலைதான் பணிபுரியும் பெண்களுக்கும் ஏற்படுகின்றது. பெண்களின் பங்களிப்பு ஏற்கனவே குறைவாக உள்ள நமது நாட்டின் தொழிலாளர் சந்தையில், இப் பிரச்சினைக்குச் சரியான தீர்வு காணப்படாமல் இருப்பது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை நேரடியாகப் பாதிக்கின்றது.
தற்போது பாடசாலை மாணவிகள் 10 இலட்சம் பேருக்கு 1.4 பில்லியன் ரூபாய் செலவில் அரசால் சுகாதார ஆரோக்கிய துவாய்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதற்கு 15 வீத பொதுத்தீர்வை, 18 வீத வற் வரி, 10 வீத துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, 15 வீத செஸ் வரி மற்றும் 2.5 வீத சமூக பாதுகாப்பு ஈட்டு வரி என 5 வகையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்களின் அத்தியாவசியத் தேவை மீதான இந்த வரி விதிப்பு மிகவும் தவறான ஒரு நடவடிக்கையாகும்.
இந்தியா, வங்காளதேசம், கென்யா, தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் இந்தச் சுகாதாரப் பொருட்கள் மீதான வரிகளை முற்றாக நீக்கியுள்ளன. ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் இவற்றை பெண்களுக்கு இலவசமாக வழங்க சட்டமியற்றியுள்ளது. எனவே, நாமும் நமது நாட்டுப் பெண் பிள்ளைகளின் நலன் கருதி இவ்வரிகளை உடனடியாக நீக்க வேண்டும்.
உயர்தரத்திலான, குறைந்த விலை ஆரோக்கிய துவாய்களை ஏன் நம்மால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியாது? இதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், உள்நாட்டுத் தொழில்துறை வலுப்பெறுவதுடன், எமது இளைஞர், யுவதிகளுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
2019 ஜனாதிபதித் தேர்தல் முதல் ஐக்கிய மக்கள் சக்தி இதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. எனவே, இது தொடர்பாக ஒரு முறையான தேசியக் கொள்கை வகுக்கப்பட்டு, பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.” – என்றார்.















