திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் ஜெயபுர பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 62 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் ஹிங்குராகொட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த சிறிய ரக ‘பட்டா’ லொறியும், திருகோணமலை நோக்கி எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் ஜெயபுர பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தின் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய சிறிய ரக லொறியின் சாரதி தம்பலகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.













