நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவிகள் தமக்கு உரிய முறையில் கிடைக்கவில்லை என மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தம்பனைக்குளம் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (21) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த கிராமத்தில் தற்போது சுமார் நூறு குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டது போல் தம்பனைக்குளம் கிராம மக்களும் பாதிக்கப்பட்டனர். உடைமைகளும் சேதமாக்கப்பட்டது. ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளும் முற்றாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதோடு, நாங்கள் முன்னெடுத்து வந்த விவசாய செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு அரசாங்கத்தினால் 25 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை வீடு துப்பரவு செய்தல் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்காக மாத்திரம் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது.
எனினும், கால்நடை இழப்பீடாக 10 இலட்சம் ரூபாய் வரை கால்நடைகளுக்கான இழப்பீடுகள் மன்னார் மாவட்டத்தின் ஏனைய கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு விவசாய பாதிப்புகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இக் கிராம மக்களுக்கு குறித்த இழப்பீடுகளுக்கான எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை.
இக்கிராம மக்களில் விவசாய செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலரது கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர். தமது கால்நடைகள் அழிவு குறித்து தாங்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தை கூறி எமக்கான கால்நடை அழிவுக்கான கொடுப்பனவை பெற்றுத்தர மறுத்து விட்டனர்.
பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் குறித்த விடயங்களில் தலையிட்டால் தமக்கு குறித்த இழப்பீடுகளை பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே, வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படும் தமக்கான இழப்பீடுகளை பெற்றுத்தர துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.













