யாழ். வலிகாமம் வடக்கு பகுதிகளில் இன்னும் விடுவிக்கப்படாது உயர் பாதுகாப்பு வலயமாக வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக இன்று 6ஆவது வெள்ளிக்கிழமையாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வலிகாமம் வடக்கில் ஜே/249, ஜே/256, ஜே/248, ஜே/251 மற்றும் ஜே/255 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் இடம்பெற்ற போர்ச் சூழல் காரணமாக அவர்களது சொந்த இடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் இன்றுவரை அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகவே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் இன்னும் வெளியேறவில்லை என்பதுடன், மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலயமாகவே முடக்கப்பட்டுள்ளன.
தமக்குச் சொந்தமான சுமார் 651 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலங்களை முழுமையாக விடுவிக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் பல வருடங்களாகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும், அதிகாரிகளினால் இதுவரை எவ்வித சாதகமான தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில், தங்களுக்குரிய தீர்வு கிடைக்கும் வரை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக மக்கள் தீர்மானித்திருந்தனர்.
அதன் பிரகாரம், ஆறாவது வாரமாக இன்றும் கறுப்புக்கொடிகளைத் தாங்கியவாறு திரண்ட பொதுமக்கள், இராணுவக் கொமாண்டோ பங்களா முன்பாகப் போராட்டத்தை ஆரம்பித்து, பின்னர் பலாலி சந்தி வரை உணர்வுபூர்வமாகப் பேரணியாகச் சென்றனர்.
தமது வாழ்வாதார நிலங்களையும், குடியிருந்த வீடுகளையும் உடனடியாகத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி இதன்போது மக்கள் கோஷங்களை எழுப்பினர்.
இப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களுடன் இணைந்து பேரணியில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










