இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (1) மாலை உத்தரவிட்டார்.
இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று (30) மீன்பிடிக்க சென்ற ஏழு மீனவர்கள் இரவு எல்லை தாண்டி மீன்பிடித்த நிலையில் இலங்கை கடற் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை இன்று (1) மதியம் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 07 மீனவர்களையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

