சிதைக்கப்பட்ட அல்லது தரப்படுத்தப்படாத போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. செனவிரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,
உத்தியோகபூர்வ இலக்கத் தகடுகள் கிடைக்கும் வரை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைய, வாகன இலக்கங்களை தற்காலிகமாக ‘A4’ அளவிலான தாள்களில் காட்சிப்படுத்தி வாகனங்களைச் செலுத்த முடியும் எனக் குறிப்பிட்டார்.
எனினும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரநிலைகளுக்கு மாறான, எழுத்துக்கள் மற்றும் எண்கள் தெளிவற்ற முறையற்ற தகடுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் விவரித்தார்.
வழங்கல் விநியோகப் பிரச்சினைகள் (Supply Issues) காரணமாக, உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் கடந்த 10 மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், இந்த விநியோகப் பிரச்சினைகள் தற்போது சீர்செய்யப்பட்டு வருவதால், எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக உத்தியோகபூர்வ இலக்கத் தகடுகளை விநியோகிக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.










