‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 1,265,270 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இங்கு 14 பயனாளிகளுக்கு உயர்தர மீன்பிடி வலைகளை வழங்கி உரையாற்றிய பிரதி அமைச்சர்,
தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் மக்கள் மீது மேலதிக சுமைகளைச் சுமத்திவிட்டு தட்டிக்கழிக்கும் போக்கைக் கடைப்பிடிக்காது எனத் தெரிவித்தார்.
இதில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், அந்த நஷ்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு மீனவர்களைப் பாதுகாக்கிறது.
அமைச்சர்களின் எரிபொருள் ஒதுக்கீடு மற்றும் மேலதிக வரப்பிரசாதங்களைக் குறைத்து, அதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தை நாம் மீனவர்களின் நலனுக்காகப் பயன்படுத்துகிறோம்.
‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுசெய்யக் காலதாமதம் ஏற்பட்டமைக்குக் காரணம், மக்களுக்குத் தரமற்ற பொருட்களை வழங்காமல், எமது அமைச்சின் கீழள்ள நோர்த் சீ (Northsea) மற்றும் சீநோர் (Ceynor) நிறுவனங்கள் ஊடாக உயர்தர வலைகள் மற்றும் படகுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்தமையே ஆகும்.
நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை 600 மில்லியன் டொலர்களாக உயர்த்துவதே எமது இலக்கு. அந்த இலக்கை அடைய வேண்டுமானால் உங்கள் வாழ்வாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும்,” என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், கடல் மாசடைவதைக் குறைப்பதற்கு மீனவ சமூகம் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் எனவும், இயற்கைக்கு மதிப்பளித்து சமுத்திரத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும் என்றும் அவர் இதன்போது நினைவுபடுத்தினார்.
இவ்வருட இறுதிக்குள் சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் நிவாரணங்கள் வழங்கி முடிக்கப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சீநோர் நிறுவனத்தின் தலைவர் வசந்த மான்னப்பெரும உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கொழும்பு மாவட்ட மீனவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.










