விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது 7ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த எஸ்.பெனாட் (வயது 73) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் கடந்த 8ஆம் திகதியன்று வீதியில் நின்றுகொண்டிருந்தார். இதன்போது பாண் பெட்டியை கட்டியவாறு வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று குறித்த முதியவர் மீது மோதியது. இந்நிலையில் குறித்த முதியவர் படுகாயமடைந்தார்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அன்றையதினமே மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.