கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவில் உள்ள தருமபுரம் வைத்தியசாலையில் போதிய அளவிலான புதிய கட்டிட வசதிகள் இருந்த போதிலும் மக்களுக்கான சிகிச்சை முழுமையாக பெற முடியாத நிலையில் உள்ளதாக நோயாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தர்மபுர வைத்தியசாலையை நம்பி இருபத்தி ஒரு கிராமங்களுக்கு அதிகமான மக்கள் தமது வைத்திய சேவையினை தருமபுர வைத்தியசாலையிலேயே பெற்று வருகின்றனர். இருப்பினும் தருமபுர வைத்தியசாலையில் ஒரே ஒரு வைத்தியராலேயே நாளாந்தம் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் ஒரு நாள் பொழுதை வைத்தியசாலையிலேயே கழிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாளாந்தம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், கிளினிக் நோயாளர்கள், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் அனைவரையும் தற்பொழுது இங்கே கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஒரு வைத்தியரே சிகிச்சைகள் வழங்கி வருகின்றார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் தற்பொழுது இயங்கி வரும் தருமபுர வைத்தியசாலையில் மகப்பேற்று வசதி, குருதி பரிசோதனை, அவசர சிகிச்சை பிரிவு என பல சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது ஒரு குருதி பரிசோதனை செய்வதாயின் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தருமபுர வைத்தியசாலையை தரம் உயர்த்தி சிறந்த சிகிச்சை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வாழும் மக்கள் சார்பாக வேண்டி நிற்கின்றோம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.



