மக்கள் கோரிக்கை விடுத்தால், அடுத்த கட்டத் தேர்தல்களில் நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நிலைமை மிகவும் கவலைக்குரியதாகும். இது குறித்து மக்களிடமே கேட்டால் உண்மை நிலைமையைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளலாம்.
எம்மைக் கைது செய்ய நினைப்பவர்கள் தாராளமாகக் கைது செய்யட்டும். கைது செய்வதற்கு வேறு யாரும் இல்லாமையால்தான் எங்களைக் குறிவைக்கின்றார்கள். ஆனால், மக்கள் எப்போதும் எங்களுடன்தான் இருக்கின்றார்கள் என்பதே உண்மையான யதார்த்தம்.
இனிவரும் தேர்தல்களில், அந்தந்தக் காலகட்டங்களில் மக்கள் யாரை எதிர்பார்க்கின்றார்களோ, அவரையே நாம் வேட்பாளராகக் களமிறக்குவோம். மக்கள் கோரிக்கை விடுத்தால், நிச்சயமாக நாமலுக்கு அந்த வாய்ப்பை வழங்குவோம்; மக்கள் விரும்பாவிடின் அவ்வாறு வழங்க மாட்டோம்.” – என்றார்.















