முல்லைத்தீவு – குணா கலைக் கல்லூரியின் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளின்படி சிறப்புச்சித்தி பெற்ற மாணவர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வானது 20.06.2026 நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
இந்நிகழ்வானது விருந்தினர் மற்றும் சாதித்த மாணவர்கள் ஆகியோரது வரவேற்புடன் ஆரம்பமானது. அந்தவகையில் விருந்தினர்களும், சாதனை மாணவர்களும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, தவில், நாதஸ்வர இசை முழக்கத்துடன் மலர்தூவி வரவேற்று அழைத்துவரப்பட்டனர்.
அதனையடுத்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். அதனையடுத்து விருந்தினர்களது உரை, மாணவர்களது கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.
மேலும், இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான ச.நாகரத்தினம், பொ.பேரின்பநாயகம், ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் சி.சுப்பிரமணியேஸ்வரன், ஓய்வுநிலை உள்நாட்டு இறைவரி ஆணையாளர் த.கோபலசிங்கம், ஓய்வுநிலை கமநல உதவி ஆணையாளர் தி.அமிர்தலிங்கம் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





















