“உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். பொறுப்புக்கூறல் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், அரசியல் பழிவாங்கல்களை நோக்கமாகக் கொண்ட விசாரணைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் உண்மையான நீதியை வழங்காது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் நிலைமை குறித்து, தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு நடத்தப்படும் விதம் குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகளும், அவரது சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
சுரேஷ் சலே ஒரு நீதிவானின் விளக்கமறியல் உத்தரவின் கீழ் அல்லாமல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இங்கு ஆச்சரியத்துக்குரிய விடயம் என்னவென்றால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராகப் பல வருடங்களாகப் பிரசாரம் செய்த மற்றும் குரல் எழுப்பிய அதே செயற்பாட்டாளர்கள் பலர் இப்போது மௌனம் காப்பதாகும். அவர்களின் இந்தத் திடீர் மௌனம், அவர்களின் கொள்கை மற்றும் நம்பகத்தன்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாம் அனைவரும் உறுதியாக உள்ளோம். ஆனால் அது எவ்வித பாரபட்சமும், அரசியல் செல்வாக்கும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறையும் இன்றி வழங்கப்பட வேண்டும். விசாரணைகள் உண்மையைக் கண்டறிவதற்குப் பதிலாக, அரசியலால் வழிநடத்தப்பட்டால், அது இன்னமும் உண்மையான நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இழைக்கப்படும் பெரும் துரோகமாகவே அமையும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, விடயங்களை மிகத் தெளிவாக விவரித்துள்ளது. அத்துடன், குண்டுத் தாக்குதல்களின் போது கடமை துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியத்துக்குத் தனிப்பட்ட ரீதியில் பொறுப்புக் கூற வேண்டியவர்களையும் அந்த அறிக்கை அடையாளம் காட்டியுள்ளது. ஆனால், கடமையை மீறியதாக அந்த அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினரே தற்போது குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சி என்ற அடிப்படையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர். தவறிழைத்தவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தற்போதைய விசாரணைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. இது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் உண்மையான நீதியை வழங்காது என்பதே எனது நேர்மையான கருத்தாகும்.” – என்று நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.










