அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிராந்திய புதிய மத்திய குழுவைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (07)ஆம் திகதி அட்டாளைச்சேனையிலுள்ள லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளரும் முன்னாள் பிரதி தவிசாளர் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளரான ஜனாப் எம்.எஸ்.எம். ஜெளபர், JP (Pro), அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் கலந்து கொண்டதுடன் அதிதியாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட கல்வி விவகார இணைப்பாளருமான எஸ்.எம். சபீஸ் கலந்துகொண்டு புதிய நிர்வாகக் குழுவைத் தெரிவு செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
மேலும், கட்சியின் வட்டார மற்றும் பிரதேச மட்ட முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டதுடன், புதிய மத்திய குழு உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்படி, அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவராக சமூக சேவையாளர் ஜனாப் ஏ.எல். நிசார் தெரிவு செய்யப்பட்டார்.
உப தலைவர்களாக தொழிலதிபரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான ஜனாப் ஐ.எல்.எம். ரபீக் மற்றும் ஆங்கில ஆசிரியரும் சமூக சேவை அமைப்பின் தலைவருமான ஜனாப் எம்.ஐ. ஹாஃபில் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
செயலாளராக சமூக சேவையாளரான ஜனாப் எஸ். ரஹீம் (சஃபான்) தெரிவு செய்யப்பட்டதுடன், தேசிய பாடசாலை நூலக உதவியாளரான ஜனாப் ஏ.எல். ஜனூஸ் உப செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.
பொருளாளராக முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான ஜனாப் எம்.எல். ரியாஸ் தெரிவு செய்யப்பட்டதுடன், மேலும் பலர் நிர்வாக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
கட்சியின் அமைப்பு வலுவூட்டல், மக்கள் தொடர்புகளை மேம்படுத்தல் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தல் ஆகிய நோக்கங்களை முன்னிறுத்தி இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்தது.










