பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, வல்வெட்டித்துறை பொலிஸாரின் கடுமையான மிரட்டல்களையும் கடந்து இன்று முற்பகல் வல்வெட்டித்துறைச் சந்தியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
வல்வெட்டித்துறையின் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வலியுறுத்தியும், வல்வெட்டித்துறை பொலிஸாரின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உணர்ச்சிப் பூர்வமாகக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களை, நேற்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் நேரில் அழைத்து கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியிருந்தனர்.
“இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழேயே உங்களையும் கைது செய்வோம்” எனப் பொலிஸார் மிரட்டியிருந்த நிலையிலும், அதனைப் பொருட்படுத்தாது பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் திரண்டு வந்து இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், உப தவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் மற்றும் சிவில் சமூகத் தரப்பினர், எவ்வித அடிப்படைகளுமின்றிப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழ் இளைஞர்கள் மற்றும் கலைஞர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்வதைக் கடுமையாகக் கண்டித்தனர். அத்துடன், எவ்விதக் குற்றமுமற்ற பாடகர் சங்கீத் உடனடியாகச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதைப் பாதுகாப்புத் தரப்பினரும் தற்போதைய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.










