கல்முனை பிரதேசத்தில் உள்ளூர் வளங்களைக் கொண்டு உச்ச பயனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தேசிய மக்கள் முன்னணியின் ஸ்தாபக்கரும் நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகருமான, சமூக சேவைகர் பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.
கல்முனை பிரதேச அரசியல் களநிலவரம் தொடர்பில் சாத்தியமான அரசியல் கட்சி உருவாக்கத்துடன் மக்கள் முன் அறிமுகம் செய்ய வருகின்ற பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர், வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவ்வறிக்கையில் அவர் குறிப்பிடும் போது,
கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட தேர்தல் விரைவில் சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசம் எங்கும் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ள மக்களுக்கு நாபீர் பவுண்டேஷன் அமைப்பு புதிய பரிணாமத்துடன் அரசியல் கட்சி ஒன்றை ஸ்தாபித்து களம் இறங்குகிறது.
மக்கள் முன்னுள்ள சவால்களை முறியடித்து உள்ளூர் உச்சபட்ச வளங்களை கொண்டு, உயர்ந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு நல்ல சிந்தனை உள்ள திறமையுள்ள மக்கள் பிரதிநிதிகள் எமது கட்சியில் இணைக்கப்பட உள்ளார்கள். இதற்கான அழைப்பினை பகிரங்கமாக நாங்கள் விடுகின்றோம்.
மக்களது சேவையை மட்டும் இலக்காகக் கொண்டு செயல்பட விரும்புகின்ற அரசியல்வாதிகள் எதிர்வருகின்ற கல்முனை பிரதேச தேர்தல் களத்தில் எமது கட்சியில் பயணிக்க விரும்பினால் இப்போதே தொடர்பு கொள்ளுங்கள் என்ற அழைப்பை விடுக்கின்றோம்.
கல்முனை பிரதேச மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் சிறந்த ஆரோக்கியமுள்ள ஒரு கட்சியாக எமது கட்சி செயற்படுவதோடு, நாம் தேர்தலில் களம் இறக்கும் வேட்பாளர்களும் செயற்பாட்டு ஆரசியல்வாதிகளாக இருப்பார்கள்.
கடந்த காலங்களில் நாபீர் பெளண்டேசனானது அரசியல் அதிகாரம் இல்லாதிருக்கும் நிலையில் அமைப்புக்களை
பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு மக்கள் நலன் பேணும் திட்டங்களை செய்து வருகின்றது.
ஆனால் அதிகாரத்துடன் புதிய கட்சியில் மக்கள் நலனை மட்டும் நோக்காகக் கொண்டு நாம் எமது தாய்ப் பிரதேசத்தில் களம் காணும்போது, கல்முனை பிரதேசம் எனும் எமது தாயக மக்கள் எங்கள் கைகளை பலப்படுத்த வேண்டும். இதனால் கடந்த கால அரசியல் வங்குரோத்து நிலையை எமது பிரதேசத்தில் இருந்து களைந்தெடுப்போம். கல்முனை பிரதேசம் பேசும் அழகாபுரியாக மாறும் திட்டங்களை நாம் அமுல்படுத்துவோம்.
நாங்கள் எவ்வளவு கஸ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்தாலும் எமது பிள்ளைகளுக்கு கல்வியினை கொடுத்து அவர்களை சமுதாயத்தில் உருவாக்க வேண்டிய கட்டாய தேவைப்பாடும் எங்களுக்கு இருக்கின்றது. கல்வியினை எமது பிள்ளைகளுக்கு கொடுப்பது, காசு சம்பாதிக்கின்ற குறிக்கோளை மட்டும் கையில் எடுத்து செயற்படவிடாமல், படித்த சமுதாயத்தினை கட்டி எழுப்புவதற்கான அடித்தளமாக கல்வியை மாற்ற வேண்டும். அது மார்க்க கல்வியாக இருந்தாலும் சரி.! உலகக் கல்வியாக இருந்தாலும் சரி.! அதனை நாங்கள் எமது பிள்ளைகளுக்கு கொடுப்பது எமது கடமையாகும்.
இதற்கு சரியான திட்டமிடல் வேண்டும்.
அதே போன்று தேர்தல் காலங்களில் முளைக்கின்ற அரசியல் காளான்களுக்கும் சிறந்த பாடம் புகட்ட மக்கள் முன்வர வேண்டும்.
சிறந்ததொரு அரசியல் கலாச்சாரமிக்க அரசியல் கல்வியினை கொடுக்கின்ற அல்லது அவர்களை தெளிவுபடுத்துகின்ற சமுதாயமாக மாற வேண்டும்.
இதற்காக தேசிய மக்கள் முன்னணியில் கைகோர்த்து, நாம் எதிர்காலத்தில் முன்னெடுக்கின்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகின்றோம் என்றார்.










