பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர இன்று செவ்வாய்க்கிழமை முதன்முறையாகத் திருகோணமலை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போது அவர் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களது நீண்டகாலக் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்ததுடன், சில அவசரத் தேவைகளுக்கான உடனடித் தீர்வுகளையும் வழங்கினார்.
இதன்போது, திருகோணமலை மாவட்டத்தில் முப்படையினரால் பாதுகாப்புத் தேவைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகளை மீள ஒப்படைப்பது தொடர்பான பிரதான கோரிக்கைகள் பிரதியமைச்சரிடம் விரிவாக முன்வைக்கப்பட்டன.
இவ்விடயம் குறித்துப் பாதுகாப்புத் தரப்பினருடன் விரைவாக ஆராய்ந்து, சிவில் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சாதகமான முறையில் தீர்வு வழங்குவதாகப் பிரதியமைச்சர் பொதுமக்களுக்கு இதன்போது உறுதியளித்தார்.
இதேவேளை, முப்படைகளிலிருந்து ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் பிரதியமைச்சரைச் சந்தித்து, தங்களது ஓய்வூதியக் கொடுப்பனவுகள் மற்றும் நலன்புரி உதவிகள் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இது குறித்தும் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதியமைச்சர் அருண ஜயசேகர, நாளையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பாதுகாப்பு முகாம்களுக்கான கள விஜயங்கள் மற்றும் சிவில் சமூகச் சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.














